மண்ணெய்யாலும்
மசகினாலும்
வயிறு வளர்க்கும்
நாடுகளே...
உலகமயமாக்கப்பெயரோடு
கலாச்சாரத்தை
பூண்டோடு அழிக்கும்
மேற்கத்தேயமே...!
உங்களிடம் நாம்
பணிபுரிவதை
நீங்கள் தப்பாகக்
கணக்கிடுகிறீர்கள்
பொதிசுமக்கும்
மாடுகளாய்
கைப்பொம்மைகளாய்
உங்களுக்கு நாங்களா?
நீங்கள்
தங்கக்கிண்ணங்களில்
உடல்மினுக்கும்
பெண்களை
சுவைத்துக்கொண்டு
அருந்துவதெல்லாம்
எங்கள் உதிரமும்
வியர்வையும்
மாடாகப்
படுத்துகிறீர்கள்
திரும்பிக்குத்தவும்
எங்களுக்குத்தெரியும்
உங்கள் நாட்டில்
வயிறுகழுவ
வந்துவிட்டோம்.
உங்கள்மீது கோபமில்லை
என்கோபமெல்லாம்
இறையாண்மையை அழித்து
மேலாண்மையை வகுத்து
சொல்லாண்மையை
தட்டிப்பறித்த
உன்
ஈசலின்மீதுதான்....
ஒருவருடத்துக்குள்
ஓரிலட்சம் ஆண்டுகளின்
வேலை
வாங்குகிறீர்கள்!
இன்ஸான்...
கூடிக்கூடிப்போனால்
அறுபதோ அன்றேல்
எழுபதோதான்
அநுபவிப்பான்...
நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா... மரமனிதர்களா
என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள்
ஒவ்வொன்றும்
உங்களுக்கு ஒருநாள்
வதைசெயும்!
தம்பட்டம் அடிக்காதீர்கள்
உரத்துப்
பேசாதீர்கள்!
கருவிலிருந்து
வெளியேவிட்டவனைப்
பயப்படுகிறோம்...
மாடுபடாத
பாடுபடுகிறோம்
கோடான
கோடிபெறுகிறீர்கள்
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்குதெரியப்போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு
உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை
அவனே மாபெரியோன்....!
ஓரிரு ரியால்களை
ஓரிலட்சம் டாலர்களாய்
பார்க்கிறீர்கள்.....
ஓரிரு டாலர்களைவைத்து
ஆன்மாவை
மறக்கிறீர்கள்....
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள்
எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம்
வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க
அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு
வையுங்கள்!
ஓரிருநாட்களேனும்
எங்களையும்
வாழவிடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச்சாப்பிட
உயிர்கள்
காத்துக்கிடக்கின்றன.
உயிரோடு
ஒட்டிப்பிறக்காததை
உங்கள் காசாலேயாவது
பெறமுயலுங்கள்
எங்கள்வலி புரியும்
உங்கள் வழிதெரியும்!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி :
# முத்துக்கமலம்,
# வார்ப்பு
# ஒருநாள்
ஒருகவிதை
# பூங்காவனம்
No comments:
Post a Comment